Select Your Favorite Topic! Enjoy Reading!!

Friday, March 25, 2016

மெகா புத்திசாலிகளாக மாறுவது எப்படி ? - கட்டுரை


      இந்த உலகம் இரண்டிரண்டு தன்மைகளால், செயல்களால், பொருட்களால், உயிர்களால் சூழப்பட்டுள்ளது. நல்லது-கெட்டது என்ற அலகைக் கொண்டு தன்மைகள், செயல்கள், பொருட்கள், உயிர்கள் அனைத்தையும் பிரிக்கலாம்.

      நல்லது-கெட்டது, சிறியது-பெரியது, நீளமானது-அகலமானது, ஒல்லியானது-பருமனானது, இதெல்லாம் அளவை அடிப்படையாகக் கொண்டவை. 

      நல்லவன்-கெட்டவன், சாது-முரடன், முட்டாள்-அறிவாளி,  கோழை-வீரன், இவை பண்புகளை அடிப்படையாகக் கொண்டவை. 

      அதேபோல மிருகங்களை, முயல்-ஆமை, மான்-புலி, பூனை-எலி, எறும்பு-யானை, என்று தொகுக்கலாம். ஆனால் அடிப்படையாக பார்த்தால், ஒன்று அளவு இன்னொன்று பண்பு. ஆங்கிலத்தில் சொல்வது என்றால் குவான்ட்டிட்டி, குவாலிட்டி. 

      ஒரு வீட்டில், மகனுக்கு பெண் பார்க்க கிளம்பும்போது, அப்பா சொல்லுகிறார். 

    “ஓனக்கு புடிச்சி இருக்கா  ?  இல்லையா  ?  அதுதான் முக்கியம். நாங்க முடிவு பண்ண பின்னால, அது சொத்தை, இது சொள்ளை ன்னு சொல்லக் கூடாது. ”

      அதுக்கு பையன் சொல்றான், “ ஒரே ஒரு கன்டிஷன்தான், இதை மட்டும் பாத்துட்டு வாங்க. அது போதும்.”

          “என்னடா கன்டிஷன்  ?” 

“நீங்க பாக்கற பொன்னு, ஜீரோ சைஸ்ல இருந்தா, ‘ எஸ்.’        பீரோ  சைஸ்ல இருந்தா,  ‘நோ’ 

      பண்புகள் அல்லது குணங்கள வச்சும் பிரிக்கலாம். எப்படி ? 

      நல்லவன்-கெட்டவன், சாது-முரடன், வீரன்-கோழை, இப்படி பண்புகளை அடிப்படையாகக் கொண்டும், இரண்டிரண்டு குணாம்சங்களாக பிரிக்கலாம்.

      எதிரெதிர் துருவங்களான குணங்களை வைத்து, எடுத்த சினிமா படங்கள் கூட சக்கைப்போடு போட்டிருக்கின்றன. 

      உதாரணம்,  எம் ஜி ஆர்  நடித்த எங்க வீட்டுப் பிள்ளை. ஒருத்தர் கோழை எம் ஜி ஆர்,  இன்னொருத்தர் வீர எம் ஜி ஆர். 

      ரஜினி நடிச்ச படம் ‘எந்திரன்’ -- இதுவரைக்கும் வந்த தமிழ் படங்கள்ல வித்தியாசமான டபுள் ஆக்ஷன் படம்.  ஒரு ரஜினி மனுஷன், இன்னொரு ரஜினி – ‘ரோபோ’ 

      ஒருநாள் என் மகன், படம் போட்டுக்கிட்டு இருந்தான். அப்போ திடிPர்னு ஒரு சந்தேகம் கேட்டான்.

    “நாம் பணக்காரா ?   ஏழையா ?” 

      இதுவரைக்கும் நான் யோசிக்காத கேள்வி. இந்தக் கேள்விக்கு    ‘ ஃபாஸ்ட் ஃபுட் ’ மாதிரி, ஏதாச்சும் சொல்லணும். 

      அவன் மனதில் எதற்கு ஒரு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்த வேண்டும் ? 

      “ நாம பணக்காரர்தாண்டா” என்று சொல்லிவிட்டு, அதற்குமேல் அதுபற்றி நான் யோசிக்கவில்லை. 

      அரைமணி நேரம் கழித்து, அவன் வரைந்த படத்தை என்னிடம் காட்டினான். 
      இரண்டு வீடுகள் வரைந்திருந்தான். ஒரு வீட்டிற்கு ஏழைவீடு என்றும், இன்னோரு வீட்டிற்கு, பணக்காரர்வீடு என்றும், தலைப்பிட்டிருந்தான். 

      இரண்டு வீடுகளும் ஏறத்தாழ, ஒரே மாதிரியாய் இருந்தது. ஏழை வீட்டு வாசலில், இரண்டு மாடுகள் கட்டியிருந்தன. பணக்காரர் வீட்டு வாசலில் ஒரு கார் நின்றிருந்தது.

      எனக்கு ஒரே ஆச்சரியம். என்மகனுக்கு 5 அல்லது 6 வயதுதான் இருக்கும் அப்போது. 

      இதுமாதிரி ஒப்பிடுவது  தவறா சரியா ? 

      சிலவற்றை ஒப்பிடலாம். சிலவற்றை ஒப்பிடக்கூடாது. 

    “கோழிக் குழம்பை எங்க அம்மா வைக்கணும் சாப்பிடனும். குழம்பா இது ?  பாத்திரத்தை கழுவி ஊத்தன மாதிரி !” இப்படி மனைவி சமையலை அம்மா சமையலுடன் ஒப்பிட்டால என்ன நடக்கும் ?  
 .
    “இனிமே சிக்கன் வேணும்னா உங்க அம்மா வீட்டுக்கு போங்க. இல்லன்னா அவுங்க இங்க வரும்போது, சமைச்சி கொட்டிக்கிங்க. இனிமே எங்கையால சிக்கன் சமைக்க மாட்டேன்.” இதுதான் நடக்கும். 

      இதுக்குப் பேருதான், சொந்தக் காசுல சூனியம் வச்சிக்கறது.
      யாரோடு ஒப்பிடலாம் ?  யாரோடு ஒப்பிடக்கூடாது ?  இதுபற்றி ‘சுகிசிவம்’ ஒரு விளக்கம் சொன்னார். 

      அறம், பொருள், இன்பம் இந்த மூன்றில், நம்மைவிட, அதிகமாக அறம் செய்வோருடன், ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களைவிட அதிகம் தர்மகாரியங்களில் ஈடுபட வேண்டும், என்ற நோக்குடன்.

      பொருள் -- நம்மைவிட குறைவான பொருளாதார வசதி உடையவர்களோடு ஒப்பிட்டு பார்த்து,  “நாம எவ்ளோ பரவால்ல” என்று திருப்தி அடைய வேண்டும்.

      இன்பம்,  அறுபது இருபதைப் பார்த்து பெருமூச்சு விடக்கூடாது. வயசுக்குத் தகுந்த மாதிரி, அடக்கி வாசிக்க வேண்டும் அல்லது வாசிப்பை நிறுத்திவிட்டு, சுவாசிக்க மட்டும் செய்ய வேண்டும்.

      ஆனால் இப்படி இரண்டிரண்டாக சொல்லுவது எல்லாம், ஒப்பிடு- வதற்காகவே சொல்லப் படுகிறது.

      இதுவா அதுவா ? என்று முடிவெடுப்பது பல சமயங்களில், சவாலான காரியம். இந்த முடிவுகள் பலரின் வாழ்க்கையை துப்குரமாக புரட்டி போட்டுவிடும்.

      சுட்டப்பழம் வேண்டுமா ?  சுடாதபழம் வேண்டுமா ?  என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல், தமிழ்ப்பாட்டி அவ்வையே தடுமாறினாள். ஆனால் இந்த காலத்து குழந்தைகள், அவ்வையை எப்படி தூக்கி சாப்பிடுகின்றன என்று பாருங்கள்.

      உனக்கு அம்மா பிடிக்குமா ?  அப்பா பிடிக்குமா ? அநேகமாக எல்லா வீடுகளிலும், அட்சரம் பிசகாமல் குழந்தைகளிடம் கேட்கப்படும் கேள்வி.

      குழந்தைகளும் யோசிக்காமல் பட்டென்று சொல்லுகின்றன.      “ரெண்டுபேரையும்”  இந்த குழந்தைகள் புத்திசாலிகள்.

      இந்த கேள்விக்கு ஒரு குழந்தை இப்படி பதில் சொன்னது.     ‘எனக்கு’ என்று சொல்லி, கொஞ்சம் இடைவெளி கொடுத்து,        “ “பாட்டியை பிடிக்கும்”  என்று சிரித்தது.

      இந்தக் குழந்தைகள் மெகா புத்திசாலிகள். 

குழந்தைகள் பெரும்பாலும் பெரியவர்களைத்தான் நகல் எடுத்துதான்  வளர்கின்றன. உண்மையாக குழந்தைகளை நகலெடுத்தால் நாமும் மெகா புத்திசாலிகள் ஆகலாம். 
         

                    


1 comment:

  1. வற்றாத எழுத்து வளம்... தோற்றத்தில் இருக்கும் அதே இளமை எழுத்திலும்.. வாழ்க ...வளர்க.
    ஃபாரூக்

    ReplyDelete