சிலபேருக்கு மேடையும் மைக்கும் கிடைச்சிட்டா விடமாட்டாங்க. மேடையில் உட்கார்ந்திருக்கற ஆளு… எதுத்தாப்புல உட்காந்துக்கிட்டு இருக்கற ஆளு…. தூரத்து திண்ணையில உட்காந்து சுருட்டு குடிச்சிக்கிட்டு இருகிற தாத்தாமாருங்க அத்தனைபேரையும்,… ஒவ்வொருத்தரா பேரைச்சொல்லி…பேசுவார் ஒரு முக்கா மணிநேரம்..
இப்பவாச்சும் முடிச்சுருவாருன்னு கூட்டத்துல இருக்கறவங்க நெனச்சிக்கிட்டு இருக்கும்போது, இப்போது என் உரையைத் தொடங்குகிறேன் அப்படீன்னு அதிர்ச்சி வைத்தியம் செய்வார்;.
இந்த மாதிரி மேடையில் ஒருத்தர் பேசிக்கிட்டு இருந்தார். ஒருத்தர் உட்கார்ந்து உட்கார்ந்து பார்த்தார். போயிடலாமா அப்படீன்னு பார்த்தார். அவருக்கு பின்னாடி ஒருத்தர் நல்லா பேசக்கூடியவர் இருந்தார்;. அதனால பொறுமை இழந்த அவர் என்னா பண்ணார் ? இடுப்புல ஒரு வெட்டறிவாள் வச்சி இருந்தார். இதை கையில் எடுத்துக்கிட்டு நேரா மேடையை நோக்கி நடந்தார். அந்த பேச்சாளர் இவரைப் பார்த்துட்டார். 'அண்ணே கொன்னுடாதீங்கண்ணே இத்தோட பேச்சை முடிச்சிக்கிறேன்" ன்னார்.
'ஒண்ணை வெட்றதுக்காக நான் வரல்லைடா. உன்னை ஏற்பாடு பண்ணி கூட்டிகிட்டு வந்தவனைத்தான் தேடறேன். அவனை சும்மா விட்டுட்டா… நாளைக்கு மறுபடியும் உன்னை மாதிரி ஆளுங்கள கொண்டு வந்திடுவான்" அப்படீன்னார்.
சிலபேர் வீட்டுக்கு வருவான். ஆபீசுக்கு வருவான். டீ கடைக்கு வருவான். பஸ் ஸ்டாப்புக்கு வருவான். பஸ்ஸ{ல வருவான். ரயில்ல வருவான். சம்மந்தம் சம்மந்தமே இல்லாமப் பேசி போட்டுத் தள்ளிடுவான்.
அவன் பேசறது நமக்கும் பிரயோஜனப்படாது….
அவனுக்கும் பிரயோஜனப் படாது..
இந்தமாதிரி ஆளுங்களப்பாத்து வெந்துப்போயி, அவங்களுக்காக பயனில சொல்லாமை அப்படீன்னு ஒரு அதிகாரத்தை ஒதுக்கி… அதுல 10 திருக்குறள் எழுதி இருக்கார் திருவள்ளுவர்.
அதுல ஒண்ணுதான் இந்த திருக்குறள்.
பயனில்சொல் பாராட்டுவானை மகன் எனல்
மக்கட் பதடி எனல்.
இந்த மாதிரி யாருக்கும் பயன்படாம பேசிக்கிட்டு திரியறவனை மனுஷன்னு சொல்லாதீங்க மனிதர்கள்ல அவன் பதர்…. அப்படீங்கறார்.
பதர்ன்னா என்னான்னு நகர்புறத்துக்காரங்களுக்கு சொல்லணும். அதாவது மணியில்லாத தானியம். அதுதான் பதர்;. இப்படி பேசற ஆளுங்களுக்கு பதர் அப்படீன்னு பேர் வச்சிருக்கார் திருவள்ளுவர். 'பதர்ன்னா உதவாக்கரை" ன்னு அர்த்தம். பதரைக்கூட கிராமத்துல வறட்டி தட்ட பயன்படுத்துவாங்க. ஆனா இந்த வறட்டு முண்டங்கள வறட்டிதட்டக்கூட பயன்படுத்த முடியாது….
ஆக உங்கள எல்லோரும், விரும்பணும்ணா நீங்க மணியா இருக்கணும். பதரா இருக்கக் கூடாது. எல்லாருக்கும் பயன்படும்படியா பேசணும்…. இல்லன்னா பேசாமல் இருப்பது உத்தமம்;.
இது வரைக்கும், நம்மை எல்லோரும் விரும்பணும்னா, பயன் இல்லாத விஷயங்களை பேசக்கூடாது.
பள்ளிக்கூடத்தில் வழக்கத்துக்கு மாறா ஒரு வகுப்பு மட்டும் ரொம்ப அமைதியா இருந்தது. பையங்க அநியாயத்துக்கு அமைதியா உக்காந்து இருந்தாங்க. என்ன காரணம்னு யாருக்கும் விளங்கல.
விசாரிச்சிப் பார்த்த பின்னாடிதான் விஷயம் தெரிஞ்சது.
'யாரும் பேசறதா இருந்தா ஆங்கிலத்துலதான் பேசணும்ன்னு சொல்லிட்டாங்க டீச்சர். அதான் பையங்க எல்லாரும் கப்சிப்புன்னு ஆயிட்டாங்க.. அது ஆங்கில வகுப்பு"
உலகத்தை ஜெயிக்கணும்னா பேசணும். பேசி ஜெயிச்சவங்கதான் அதிகம். ஆனா அந்தப்பேச்சு பிறருக்கு உதவும்படியாக இருக்கணும். அப்படி பேசினவங்கதான் ஜெயிச்சாங்க.
No comments:
Post a Comment