Select Your Favorite Topic! Enjoy Reading!!

Friday, April 8, 2016

உலகின் பெரிய பணக்காரனாக என்னை மாற்றியது எது தெரியுமா ?


ஆண்ட்ரூ கார்னகி

ஆண்ட்ரூ கார்னகி 1835 ம் ஆண்டு ஒரு ஏழை சிறுவன். அவன் அப்பா ஒரு நெசவுத் தொழிலாளி. தொழிலாளர்களின் தலைவராகவும் இருந்தார்.

வறுமையான குடும்பப் பின்னணி, புத்தக மூட்டை சுமக்கும் வயதில் அவன் குடும்பத்தை சுமந்தான்.

குறைவான விலைக்கு பழங்களை வாங்கி வீடுவீடாக சென்று அவற்றை விற்று பணம் சம்பாதித்தான்.

பஞ்சம் பிழைக்க பட்டினம்போன கதையாய் கார்னகியின் குடும்பம் பிழைப்பு தேடி அமெரிக்காவிற்கு கப்பலேறியது.

ஒரு சிறிய படகில் 49 நாள் நீர்வழிப் பயணதாக புறப்பட்டு பேர்புட் ஸ்கொயர் என்ற இடத்தை சென்றடைந்தார்கள். 

அமெரிக்கா சென்றதும் கார்னகிக்கு ஒரு வேலை கிடைத்தது. அம்மா அப்பா ஒரு பஞ்சு மில்லில் வேலைக்கு சேர்ந்தார்கள். 

கார்னகிக்கு பள்ளிப்படிப்பு எட்டாக்கனியாக ஆகிவிட்டது. ஆனால் புத்தககங்கள் படிப்பதில் அதிகப்படியான ஆர்வம் ஏற்பட்டது. சிறுவன் கார்னகியின் ஆர்வத்திற்கு ஆண்டர்சன் என்பவர் தீனி போட்டார்.

; ஆண்டர்சன் அந்தப் பகுதியில் வசித்த ஒரு மிலிட்ரிக்காரர்.  அவர் பெயர் கலோனல் ஆண்டர்சன.; அவர் சொந்தமாக ஒரு நூலகம் வைத்திருந்தார். வாழ்க்கைக்கு வழிகாட்டும்படியான ஏகப்பட்ட  புத்தகங்கள் அங்கிருந்தன.

பிடித்த புத்தகங்களை எல்லாம் படித்தான், கார்னகி. அவன் படித்த புத்தகங்கள் எல்லாம் அவன் பார்வையை விசாலப்படுத்தின.

தந்தி ஆப்பரேட்டர்களிடம் உதவியாளராக இருந்த கார்னகி அதன் நுணுக்கங்களை எல்லாம் விரல் நுனியல் சேகரித்தான். 

விளைவு, கார்னகிக்கு அதிர்ஷ்டம் அடித்தது. அந்த ஆப்பரேட்டர் வேலை கார்னகியைத் தேடி வந்தது.

ஒரு சமயம் ரயில்வேயில் ஒரு விபத்து நடந்தது. அதனை சீரமைக்கும் பணிகளில் ரயில்வே மேனேஜர் ஒருவருக்கு கார்னகி பேருதவியாக இருந்தான். 

'இவன் தனக்கு தன்னுடன் இருந்தால் எப்படி இருக்கும்?" யோசித்தார்.

அதிர்ஷ்டக்காற்று மீண்டும் வீசியது. அந்த ரயில்வே மேனேஜருக்கு செயலாளர் ஆனாhன், கார்னகி. 

தான் சம்பாதித்த பணத்தில் கொஞ்சம் கொஞ்சம் மிச்சம் பிடித்தார். பல கம்பெனிகளின் பங்குகளை வாங்கினார். 

அடுத்த பத்து ஆண்டுகளில் ரயில்வேயில் அவர் தன் வாழ்க்கையை ஓட்டினார். 

ஒரு சாதாரண எழுத்தராக ரயில்வேயில் பதுங்கியிருந்தாலும் கார்னகி அடுத்த பாய்ச்சலுக்காக காத்திருந்தார்.

மெலிதான ஒரு வாய்ப்பு வந்தாலும் அதனை கை நழுவிவடாமல் எட்டிப் பிடிப்பதில் கெட்டிக்காராக இருந்தார் ஆண்ட்ரூ.

அயிரை மீனுக்காக காத்திருந்த கர்னகி கையில் சுராமீன் சிக்கியது.

ஒருமுறை வேல்ஸ் இளவரசர் அங்கு வந்திருந்தார். தற்செயலாக ரயில் எஞ்சின் பக்கத்தில் இருந்த கார்னகி, ' இந்த ரயில் எஞ்சினில் ஒரு சவாரி போகலாமா ?" என்று கேட்டார். 'சரி" என்றதும் எஞ்சின் டிரைவர் உட்பட இளவரசருடன் கார்னகி பயணம் செய்தார்.

கார்னகிக்கு அப்போது வயது 27. அப்போதே அவர் தனது சேமிப்பிலிருந்து 1000 டாலரை ஆயில் பிசினசில் முதலீடு செய்திருந்தார்.

பள்ளத்தை நோக்கி ஆர்வமாய் பாயும் ஆறுபோல அதிர்ஷ்டம் தேவதை திறமைசாலியான கார்னகியின் கதவுகளை அடிக்கடி தட்டிக் கொண்டே இருந்தாள்.

இந்த முறை அதிர்ஷ்ட தேவதை மாய்ந்து ஓய்ந்து போன ஒரு இரும்பு கம்பெனி ரூபத்தில் வந்தது. அந்த கம்பெனியை, தூக்கியெறியும் துட்டுக்கு வாங்கிக்கொள்ளச் சொல்லி வற்புறுத்தினார்கள். 

தானாய் வரும் சீதேவியை வேண்டாம் என்று சொல்வாரா ? வாங்கிக் கொண்டார். அடுத்து என்ன செய்வது ? யோசித்தார். கம்பெனி கல்லாகட்ட வேண்டும்.

கர்னகியே களத்தில் இறங்கினார். பேய் மாதிரி வேலை பார்த்தார். சப்ளை ஆர்டர்கள் குவிந்தன. கம்பெனி லாபம் பார்க்க ஆரம்பித்தது. 

கார்னகியின் பெயர் பணக்காரரர்களின் பட்டியலில் ஏறியது.

'கொடுக்கும் சாமி; கூரையை பிச்சிகிட்டு; கொட்டும்;" என்பது நிஜமானது. கார்னகி தொட்ட இரும்பெல்லாம்  22 காரட் பொன் ஆனது.

கார்னகியின் 46  வது வயதில் 45000 தொழிலாளர்களைக் கொண்ட அவருடைய தொழிற்சாலை உலகத்தின் மிகப்பெரிய இரும்பு உற்பத்தியின் சிகரமாக உயர்ந்து நின்றது. கார்னகி இரும்பு மனிதர் ஆனார்.

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தனது தொழிற்சாலையை கார்னகி விற்க விரும்பி தனது பங்குதாரர்களிடமே 150; மில்லியன் டாலருக்கு விலை பேசினார். 

வியாபாரம் உடனடியாய் படியாததால் 250 மில்லியன் டாலருக்கு ராக்பெல்லருக்குக் கொடுக்க சம்;மதித்தார். 

ஆனால் அவர் விலை அதிகம் என்றார். கடைசியாக கார்னகி 450; மில்லியன் டாலருக்கு விற்பனை செய்து முடித்தார்.

ஒரு காலத்தில் பழங்களை வாங்கி விற்பனை செய்த ஆண்டரூ கார்னகி, இன்று உலகத்தின் மிகப் பெரிய பணக்காரர். அவருடைய ஓர் ஆண்டின் ஓய்வூதியம் 150 மில்லியன் டாலர்.

'உலகின் பெரிய பணக்காரனாக என்னை மாற்றியது நான் படித்த புத்தகங்கள்தான். எனக்கு அடுத்த பிறவி என்ற ஒன்று இருந்தால் அதில் நான் ஒரு நூலகராக பிறக்க விரும்புகிறேன் " என்று அடிக்கடி சொன்ன ஆண்ட்ரூ கார்னகி 60 மில்லியன் டாலர் செலவில் 3000 நூலகங்களை அமைத்தார்.  
என்னை மாற்றியது என் புத்தகங்கள் (Image Courtesy:pioneersofbearddom.com, famouspeople.com)




No comments:

Post a Comment