விவசாய நிலத்தின் வயலில் வரப்பு போடுங்கள். வரப்பு போட்டால் வயலில் நீர் நிறைய நிக்கும். நீர் நிறைய நின்றால் பயிர் நிறைய விளையும் பயிர் நிறைய விளைந்தால் மக்களின் வாழ்க்கை உயரும். மக்களின் வாழ்க்கை உயர்ந்தால் குடி உயரும். குடி உயரும் என்றால் “போன எலெக்ஷன்ல வாங்கின சீட்டைவிட அதிகமா சீட் வாங்கலாம்” னு அர்த்தம். இது தமிழ்ப்பாட்டி ஒளவையின் வாக்கு.
“வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயர குடி உயரும், குடி உயர கோல் உயரும் ” மேலே சொன்ன அர்த்தம் இந்த பாட்டுக்குத்தான்.
நான்கு வரிகளில் அரசியல் பற்றி பேசுகிறார். அறிவியல் பற்றி பேசுகிறார். தொழில்நுட்பம் பற்றி பேசுகிறார். இயற்கையைப்பற்றி பேசுகிறார். விவசாயம்பற்றி பேசுகிறார். விவசாயிபற்றி பேசுகிறார். மக்கள்பற்றி பேசுகிறார். அரசுபற்றி பேசுகிறார். அரசின் கடமைபற்றி பேசுகிறார்.
அமெரிக்காவில் சி சி சி என்று ஒன்பதேகால் ஆண்டுகள் செயல்படுத்திய இயற்கைவள பாதுகாப்பு திட்டமும் இதுதான். இன்று நாம் இந்தியாவில் செயலபடுத்தும் டபிள்யு டி எஃப் (W D F), ஐ டபிள்யு எம் பி (IWMP), என் டபிள்யு டி பி ஆர் ஏ (N W D P R A), ஐ டபிள்யு டி பி ( I W D P), டி பி ஏ பி (D P A P), டி ஏ டி பி (D P A P) என்று சொல்லப்படும் அனைத்து வாட்டர்ஷெட் திட்டங்களும் (WATERSHED DEVELOPMENT PROJECT) ஒன்றுதான்.
இவை எல்லாவற்றிற்கும் ஒரே குறிக்கோள்தான்.
இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும். அதாவது மண்ணைப் பாதுகாக்க வேண்டும். நீரைப்பாதுகாக்க வேண்டும். காடுகளைப் பாதுகாக்க வேண்டும். அதன்மூலம் விவசாய உற்பத்தியை பெருக்க வேண்டும். மக்களின் பொருளாதார வளத்தைப் பெருக்க வேண்டும்.
இது உலகில் உள்ள எல்லா நாடுகளுக்கும் பொருந்தும்.
இவை எல்லாவற்றையும் அடக்கியதுதான் அவ்வையாரின் பாட்டு. அவ்வையாரை அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஃபிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் படித்தாரா? தெரியாது. ஆனால் அவர் ஜனாதிபதியாக பொறுப்பேற்றதும் இரண்டு ராணுவத்தை உருவாக்கினார். ஓன்று சாயில் சோல்ஜர்ஸ் (SOIL SOLDIERS) என்னும் மண்வள பாதுகாப்பு ராணுவம். இரண்டு, டிரீ ஆர்மி(TREE ARMY) . அதாவது மரங்கள் பாதுகாப்பு ராணுவம்.
இந்த இரணடிலும் இடம் பெற்றவர்கள் முழுக்கமுழுக்க இளைஞர்கள். 18 முதல் 25 வயதைத் தாண்டாத அக்மார்க் இளைஞர்கள். இந்த இரண்டு ராணுவங்களுக்கும் பொதுப்பெயர்தான் சிவிலியன் கன்சர்வேஷன் கார்ப்ஸ் (CIVILIAN CONSERVATION CORPS). அதாவது சுருக்கமாக சி சி சி ( C C C). தமிழில் இயற்கைவள பாதுகாப்பு படைவீரர்கள்.
கிரேட் டிப்ரஷன் (GREAT DEPRESSION) என்று வருணிக்கப்பட்ட பொருளாதார வீழ்ச்சியிலிருந்து அமெரிக்கவை மீட்டது, இந்த படைதான். அவாகளுடைய பெரும் நிலப் பரப்பை மண் அரிப்பிலிருந்து மீட்டது இந்த படைதான். கட்டாந்தரையாக இருந்தவற்றை காடுகளாக மாற்றியது இந்த படைதான். காட்டுத்தீயின் கொடுங்கரங்களிலிருந்து காடுகளை காப்பாற்றியது இந்த படைதான். பூச்சிகளின் தாக்குதலிலிருந்து மரங்களை பாதுகாத்தது இந்த படைதான். பூசண நோய்களிலிருந்து மரங்களைக் காப்பாற்றியதும் இந்த படைதான். வெறும் புதர்க்காடுகளாக இருந்தவற்றை நிஜக்காடுகளாக மாற்றியதும் இந்த படைதான். ஆறுகள் மற்றும் ஓடைகளை மறித்து பாலங்கள் கட்டியதும் இந்த படைதான். மாநில அளவிலான வனப்பூங்காக்களை அமைத்ததும் இந்த படைதான். கால்நடைகளுக்கு பெரும் பரப்பில் தீவனப்பண்ணைகளை அமைத்ததும் இந்தப் படைதான்.
“இந்த ஐடியா அடால்ஃப் ஹிட்லருக்கு சொந்தம்னு சொல்றாங்க உண்மையா ?” என்று சில பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு “இல்லை” என்று மறுத்துள்ளார் ரூஸ்வெல்ட்.
வேலையில்லா திண்டாட்டத்தை நகரங்களில் போக்க “ஜெர்மன் லேபர் சர்வீசஸ்” (GERMAN LABOUR SERVICES) என்று தொடங்கப்பட்டது. அது பின்னாளில் விவசாய வேலையாட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டபோது அது உதவியது என்றும் சொல்லுகிறார்கள். அதிலும் 18 முதல் 25 வயதுடைய இளைஞர்களே அமர்த்தப்பட்டார்கள். ஆனால் அவர்களுக்கு ராணுவப்பயிற்சி அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் நாஜி படைகளில் சேர்க்கப் பட்டார்கள்.
மனித உடல்களிலிருந்து எடுக்கப்பட்ட கொழுப்பிலிருந்து ஹிட்லர் சோப்பு தயாரித்தார் என்ற ஒரு செய்தி உண்டு. அவர்கூட இயற்கைவளங்கள்பற்றி உயர்வான கருத்து வைத்திருந்தார் என்பது ஆச்சரியம் தருவதாக உள்ளது. மனிதனுக்கு பாடம் சொல்லித்தருவதில் இயற்கையை மிஞ்சிய ஆசிரியர் யாரும் இருக்க முடியாது என்றார் ஹிட்லர்.
உலகிலேயே இயற்கை வளங்களையும் விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பாற்ற படைகளை அமைத்தது ரூஸ்வெல்ட் மட்டும்தான்.
பல எதிர்ப்புகள் முளைத்தபோதும் இயற்கைவளங்களை பாதுகாப்பதன் மூலம் வேலை வாயப்பை பெருக்கமுடியும் என நிரூபித்துக் காட்டினார்.
No comments:
Post a Comment