பனிக்கரடியிடம் ஐஸ்கிரீம்
விற்க வேண்டும் - 3
(நான் படித்த பள்ளிக்கூடம் வானொலி)
பனிக்கரடிகளிடம் ஐஸ்கிரீம் விற்கும் ஆசாமிகளால்தான் வானொலி விவசாய நிகழ்ச்சிகளைத் தயாரிக்க முடியும்.
படிப்பறிவு இல்லாத கிராமப்புற மக்களுக்கு விவசாய விஞ்ஞானத்தை கொண்டு சேர்க்க வேண்டும்.
அது அவ்வளவு சுலபமான வேலை இல்லை.
செய்திகளை எளிமையாக புரியும்படியாகச் சொல்ல வேண்டும்.
பலாப்பழத்தை வெட்டி, சுளையை எடுத்து, சுளையிலிருந்து கொட்டையை நீக்கி சாப்பிடும் முறையையும் சொல்லித்தர வேண்டும்.
பாகற்காய் போன்ற செய்திகளில் தேன் தடவி காதுகளுக்கு இனிப்பாய் தர வேண்டும்.
கிராமப்புறங்களீல் வேலை பார்க்கும் வளர்ச்சித் துறைகள் அத்தனையும் வண்டி வண்டியாய் செய்திகளை இறக்குமதி செய்வார்கள்.
செய்தி சேகரிப்பு சுலபம்.
அதை மாற்றி கேட்கும்படியாகத் உரு மாற்றம் செய்து தருவதுதான் நிகழ்ச்சி தயரிப்பளர்களின் வேலை.
தமிழ்நாட்டின் பசுமைப் புரட்சிக்கு பாட்டை போட்டது ஆடுதுறை 27 நெல்ரகம்.
1965 ல் அதனை வெளியிட்டது ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையம்.
அந்த நெல் ரகத்தை ரேடியோ நெல் என்று சொன்னால்தான் தெரியும் அன்று விவசாயிகளுக்கு.
ஏ டி ட்டி 27 என்றால் "அது தெரியாதுங்க" என்றார்கள், தஞ்சாவூர் விவசாயிகள்.
வானொலி மூலமாக அறிமுகம் ஆனதுதான் அதற்குக் காரணம்.
தமிழ்நாட்டில் அப்போது ஒரேஒரு விவசாய ஒலிபரப்புதான் இருந்தது. அது திருச்சி வனொலியின் ஒரு அங்கமாக இருந்தது.
திருச்சி வானொலியின் பண்ணை இல்ல ஒலிபரப்பின் சாதனைதான்
ரேடியோநெல்.
தமிழகத்தின் பசுமைப்புரட்சியில் வானொலிக்கு பெரும் பங்கு உண்டு.
இதுகுறித்து பல பத்திரிக்கைகள் அந்த காலகட்டத்தில் புகழாரம் சூட்டின.
அறுபதுகளின் பின்பகுதியில் தமிழகத்தின் விவசாய ஒலிபரப்பு இந்தியாவிற்கே முன்னோடியாக இருந்தது.
இந்திய வானொலியின் விவசாய ஒலிபரப்பின் சேவை குறித்து சர்வதேச அளவில் பாராட்டப்பட்டது.
.
தமிழகத்தின் வானொலி நிலயங்களில் விவசாய ஒலிபரப்புகளில் கொடிகட்டிப் பறந்த எனது முன்னோடிகளைக் குறிப்பிட வேண்டும்.
விவசாய நிகழ்ச்சியின் முதல் தயாரிப்பாளராக பிள்ளையார் சுழி போட்டவர் டி.கணபதி.
அவரைத் தொடர்ந்து செய்யாறு ஆடலரசன் என்ற தாண்டவராயன், துகிலி
சுப்ரமணியன், சரவணன், முருகானந்தம், பைம்பொழில் நாகூர் மீரான், சித்தப்பா ஷண்முகவேலு, வான்மதி கண்ணன், கலியபெருமாள், இன்று ஒரு தகவல் தென்கச்சி சுவாமிநாதன் ஆகியோர் விவசாய நிகழ்ச்சியின் ஆல்ரவுண்டர்கள்.
(இன்னும் வரும்)


No comments:
Post a Comment