Select Your Favorite Topic! Enjoy Reading!!

Thursday, August 21, 2014

நேற்று சிக்கன்குனியா நாளை தக்காளிகுனியா . கேள்வி பதில் - பருவ நிலை மாற்றம் - பகுதி 1 - CLIMATE CHANGE


பருவக்கால மாற்ற நிர்வாகம் 

CLIMATE CHANGE 

MITIGATION & ADAPTATION, 


நேற்று 

சிக்கன்குனியா

 நாளை 

தக்காளிகுனியா.


சாமக்கோடாங்கி சங்கரலிங்கம் கேள்வி பதில் (பகுதி 1)


1. பருவநிலை மாற்றம் என்றால் என்ன ?

பருவ நிலை மாற்றத்தின் மறு பெயர் இயற்கையின் கோபம். காற்றின் கோபம் புயல்: மழையின் கோபம் வெள்ளம்: வெய்யிலின் கோபம் வறட்சி; இவை எல்லாமே கூட்டாக சேர்ந்து கொபப் படுவதும் உண்டு.

2. பருவ மழை மாறிமாறி பெய்வதும் பருவ நிலை மாற்றம்தானே ?

மாதம் மூன்று என்று ஒரு காலத்தில் ஆண்டுக்கு 36 முறை பெய்த மழை, இப்போது மூன்றே தடவை பெய்து விட்டு ஓய்வெடுக்க  ஓடிப் போவதும் "ப நி மா". தான்.

3. 2004 ல் வந்த சுனாமியும் அதுதானே ?

அதுவும் அதேதான், "ஒரிசாவில் வெள்ளம்"  "பீஹாரில் வறட்சி" என்று ரேடியோ டீவியில் செய்தி வாசிக்க வைப்பதும் அதேதான்.

4. பருவநிலை மாற்றம் குறித்து யார் யார் தெரிந்து கொள்ள வேண்டும் ?

சமூகத்தின் பின் பெஞ்சு மக்கள், பொருளாதார நிலையின் அடித் தட்டு மக்கள், எதிர் காலத்தின் நம்பிக்கை நட்சத்திரங்களான பெண்கள், குழந்தைகள், தலை நரைத்தவர், நரைக்காதவர், டை அடித்தவர், அடிக்காதவர் எல்லொரும்தான். ஆமாம் சுனாமி வந்ததே, அது 'என்ன ஆதார்அட்டை' பார்த்தா அடித்துக் கொண்டு போனது ?

5. பருவநிலை மாற்றம் குறித்து ஏன் கவலை கொள்ள வேண்டும் ?

நரி வலம் போனால் என்ன இடம் போனால் என்ன என்று இருந்து விடலாம் தான், அது கடிக்காமல் போக வேண்டுமே. அதனால்தான் கவலை. 

6. பருவ நிலை மாற்றம் எதையெல்லாம் பாதிக்கும் ?

இந்த தலைமுறையில், இனி வரும் தலைமுறைகளில் - ஆண்களை, பெண்களை, குழ்ந்தைகளை, பெரியவர்களை, விவசாயத்தை, இதர உயிரினங்களை, தாவரங்களை.

7. பருவநிலை மாற்றம் உருவாக காரணமாக இருந்தது யார் ?

நான், நீங்கள், உலகில் உயிரோடு இருக்கும் அத்தனை பேரும் + காரணம் தெரியாமலே காரணமாக இருந்து விட்டு செத்துப் போன நம் தாத்தாமார்கள், பாட்டிமார்கள்.

8. இனி நாம் என்ன செய்ய வேண்டும் ?

எதைச் செய்தாலும் அது பருவ நிலை மாற்றத்தை அதிகரிக்குமா ? என்ன செய்தால் அதனைக் குறைக்கலாம் ? யோசிக்க வேண்டும். அதனை செயல்படுத்த வேண்டும்.

9.அன்றாட வாழ்க்கையில் பருவ நிலை மாற்றத்தை எப்படி நாம் பார்க்கலாம் ?

வராத தண்ணீருக்காக குழாயடியில் காத்திருக்கும் குட வரிசை, மழை,  முகம் பார்க்காமல் கருகிப் போகும் விவசாயம், மக்கள் பெருக்கத்தோடு போட்டி போடும் மருத்துவமனைகள், முந்தா நாள் டெங்கு, நேற்று சிக்கன்குனியா, நாளை தக்காளிகுனியா.

10. ஓசோன் என்றால் என்ன ?

பிராணவாயு அல்லது ஆக்சிஜனின் 'ஸ்ட்ராங் டோஸ்'. இரண்டு யூனிட் சேர்ந்தால் ஆக்சிஜன். மூன்று சேர்ந்தால் ஓசோன்.




No comments:

Post a Comment