தமிழ்நாட்டின் ஆறுகள்
RIVERS IN TAMILNADU
தமிழ்நாட்டில் ஆறுகள் பெரும்பாலும் கிழக்குப் பக்கமாக ஓடி வங்க கடலில் சேர்கின்றன. கேரள நாட்டின் ஆறுகள் அத்தனையும் மேற்குப் புறமாக ஓடி அரபிக் கடலில் சேர்கின்றன.
இந்த ஆறுகள் அனைத்தும் வட இந்திய ஆறுகளை விட வயது மூத்தவை . ஆனால் ஆண்டு முழுவதும் நீர் வரத்து உள்ள ஆறுகள் அல்ல. கனமழை காலத்தில் மட்டும் கரை கொள்ளமல் ஓடும்.
பனிக்கட்டி உருகி பாய்ந்து வரும் வட மாநில ஆறுகளின் நீரைக்காட்டிலும் தமிழ்நாட்டு ஆறுகளின் ஊற்று நீர் தெளிவானவை.
மேலும் தமிழ்நாட்டின் கிழக்கு முகமான சரிவு, ஆறுகளில் நீரோட்டத்தை வேகப்படுத்துகின்றன.
எப்போதும் நீரோடும் ஆறுகள்[1], எப்போதாவது நீரோடும் வறண்ட ஆறுகள்[2] இடைக்காலம் விட்டு ஓடும் ஆறுகள்[3] என மூன்று வகையாக நிலவியல் வல்லுநர்கள் பிரிக்கின்றனர்.
எப்போதும் நீரோடும் ஆறுகள், இப்போது தமிழ்நாட்டில் எதுவும் இல்லை. பாலாறு, தென்பெண்ணை ஆகியவை இடைக்காலம் விட்டு ஓடும் ஆறுகள். குண்டாறு, வைப்பாறு போன்றவை எப்போதாவது நீரோடும் வறண்ட ஆறுகள்.
[2] Ephemeral Rivers
[3] Intermittent Rivers
1.அடையாறு : சென்னை பெருநகரில் உற்பத்தி ஆகும் சாக்கடையின் ஒரு பகுதியை கூவம் ஆற்றுடன் பகிர்ந்து கொண்டு வங்காள விரிகுடா கடலுக்கு எடுத்துச் செல்லும் பெரும் பணியை செய்யும் இந்த ஆறு, செம்பரம்பாக்கத்தில் புறப்படுகிறது.
2.அமராவதி ஆறு: ஆன்பொருநை நதி என்று சங்க காலத்தில் அழைக்கபட்ட இந்த ஆறு காவிரியின் முக்கிய துணை ஆறு , சண்முகாநதி, குடகனாறு, உப்பாறு ஆகியவை இதன் உபநதிகள். கொழுமம் அருகே குதிரை ஆறு இதனுடன் சேர கரூர் நகரில் காவிரியுடன் சங்கமம் ஆகிறது.
3.அரசலாறு: தஞ்சாவூர் வரை செல்லும் காவிரி ஆறு அங்கு ஐந்து கிளை ஆறுகளாக பிரிகிறது. அவற்றில் முக்கியமான ஆறு அரசலாறு.
4.காவேரி ஆறு: கர்நாடகா மாநிலத்தில் குடகு மாவட்டத்தில் தலைக்காவேர்யில் புறப்பட்டு தமிழ்நாட்டில் வங்கக்கடலில் சங்கமம் ஆகும் ஆறு. தமிழ்நாட்டின் நெற்களஞ்சியத்தின் தாகம் தீர்க்கும் ஆறு. இது தமிழ்நாட்டின் கங்கை, சேலம், கோவை, திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் பாய்ந்து கீழைக் கடலில் கலக்கிறது. பவானி, அமராவதி ஆகியவை இதனுடன் சேரும் முக்கியமான துணை ஆறுகள்.
கெடிலம் ஆறு: திருக்கோவிலூரில் உற்பத்தியாகி மலட்டாற்றுடன் சேர்ந்து கடலூர் அருகே தென்பெண்ணை ஆற்றுடன் சேர்ந்து வங்கக்கடலில் ஐக்கியமாகிறது.
5. கல்லாறு: கிழக்கு தொடர்ச்சி மலையில் பச்சை மலைச்சாரலில் உற்பத்தி ஆகும் ஆறு.
6. குடமுருட்டி ஆறு: திருச்சி, தஞ்சாவூர் பகுதிகளில் ஓடும் காவிரியின் துணை ஆறு. திருவாரூரின் ஐந்து ஆறுகளில் ஒன்று.
7. கொள்ளிடம் ஆறு: காவிரியின் துணை ஆறுகளில் பிரபலமான ஒன்று. பரங்கிபேட்டைக்கு அருகில் கடலில் சங்கமிக்கிறது.
8. குண்டாறு: மேற்கு தொடர்ச்சி மலையில் தேனி மாவட்டத்தில் உற்பத்தி ஆகிறது. குற்றாலத்திலும் ஒரு குண்டாறு உற்பத்தி ஆகிறது. இதற்கு அரிகா நதி என்ற பெயரும் உண்டு.
9. பாலாறு: சதுரங்கபட்டினத்திற்கு அருகில் வங்க கடலில் சங்கமமாகிறது. கர்நாடகாவில் 93 கிலோமீட்டரும், ஆந்திராவில் 33 கிலோமீட்டரும், தமிழ்நாட்டில் 222 கிலோமீட்டரும் ஆக மொத்தம் 348 கிலோமீட்டர் பயணப்பட்டு 7 துணை ஆறுகளுடன் சேர்ந்து வங்கத்தில் சங்கமிக்கிறது. செய்யாறு பாலாற்றின் முக்கிய துணை ஆறுகளில் ஒன்று. ராமனாயக்கன்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர், குடியாத்தம், வேலூர், மேல்விஷாரம், ஆர்க்காடு, வாலாஜாபேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகியவை பாலாற்றின் கரையோர கிராமங்கள்.
10. வெள்ளாறு: சேர்வராயன் மலை, கல்ராயன் மலை மற்றும் பச்சை மலையில் உற்பத்தியாகும் அருவிகள் ஒன்று சேர்ந்து வெள்ளாறாக உருவெடுத்து தற்போதைய கடலூர் மாவட்டத்தில் பாய்ந்து பரங்கிப்பேட்டைக்கு அருகில் வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்திலும் ஒரு வெள்ளாறு கிழ்க்கு முகமாக ஓடி கடலில் கலக்கிறது. இது தென் வெள்ளாறு.
11. வைகை ஆறு: பழனி மலையில் தோன்றி வங்க கடலில் கலக்கிறது. இதன் துணை ஆறுகளில் முக்கியமானது சுருளி ஆறு.
12. தாமிரபரணி: பொதிகை மலையில் தோன்றி கிழக்கு முகமாய் பாயும் தாமிரபரணி ஆற்றின் சங்ககால பெயர் பொருநை நதி.
13. பெண்ணையாறு: கர்னாநாடகா மற்றும் தமிழ்நாட்டில் மொத்தம் பயணம் செய்யும் தொலைவு 400 கிலோமீட்டர். சின்னாறு[1], வாணியாறு, பாம்பாறு ஆகியவை இதன் துணை ஆறுகள். சின்னாறு மைசூரில் புறப்பட்டு தமிழ்நாட்டில் வேப்பனபள்ளி என்னும் இடத்தில் பெண்ணையாற்றுடன் கலக்கிறது. வாணியாறு சேர்வராயன் மலைத் தொடரில் உற்பத்தி ஆகி பூங்கரம்பள்ளி ரிஸ்ர்வ் பாரெஸ்ட் அருகில் பெண்ணையாற்றுடன் சேர்கிறது.
குறிப்பு: 13 ஆறுகள் பற்றிய தகவல்கள் இந்த கட்டுரையில் தரப்பட்டுள்ளன. மீதம் உள்ள ஆறுகள் பற்றிய விவரங்களை அடுத்த பகுதியில் படிக்கலாம் - கட்டுரை பற்றிய உங்கள் கருத்துக்களை gsbahavan@gmail.com என்ற மின்னஞ்சலில் அனுப்பலாம்-ஆசிரியர்
[1] சின்னாற்றின் இன்னொரு பெயர் மார்கண்டா நதி
No comments:
Post a Comment